திருச்செங்கோடு, செப்.12: திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில், உளவியல் துறை சார்பில், தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் நிறுவனர் தாளாளர், செயலர் கருணாநிதி தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்கள், நிர்வாக இயக்குனர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை கல்லூரியின் முதல்வர் பேபி ஷகிலா கொடியசைத்து துவங்கி வைத்தார். மாணவிகள் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான முழக்கங்கள், பதாகைகளை ஏந்தியவாறு சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இப்பேரணியில் துணை முதல்வர் மேனகா, பேராசிரியர்கள் ,துறைத்தலைவர்கள் மாணவிகள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர் கோமதி, உதவிப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
previous post