மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 7 பெரியார் அரசு மருத்துவமனை அருகில் உள்ள குளத்தில் தேங்கியுள்ள செடிகளை, புதர்களை அகற்றும் பணியினையும், வார்டு எண் 5ல் ஈமச்சடங்கு நடைபெறும் இடத்தில் தேங்கி உள்ள புதர்களை அகற்றும் பணியினையும், வார்டு எண் 25 கூறைநாடு ரேவதி நகரில் தேங்கியுள்ள செடி புதர்களை அகற்றும் பணியினை கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக தூய்மை பணி நடைபெற்று வருகிறது. தூய்மை பணியில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு அங்கமாக மாவட்டம் முழுவதும் ஏரி, குளம், கிளை வாய்க்காலில் தேங்கி கிடக்கும் மரம், செடி, புதர்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
குளத்தின் கரையோரங்களில் மரக்கன்று நடும் பணி நடைபெற்று வருகிறது. சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி, அதிக மரக்கன்று நடும் நபர்களுக்கு பசுமை விருது முதலமைச்சரால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக மரக்கன்று நடும் நபர்களுக்கு பசுமை விருது வழங்க தமிழ்நாடு முதலமைச்சர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ஆகியோருக்கு பரிந்துரைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.