கரூர், ஜூலை 2: புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி கரூரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் கோர்ட் புறக்கணிப்பு நடைபெற்றது. ஒன்றிய அரசு புதிய முப்பெரும் சட்டங்களை நேற்றுமுதல் அமல்படுத்தியது. இதனை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுதும் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் கோர்ட் புறக்கணிப்பு நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் தாந்தோணிமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நேற்று காலை வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் நகுல்சாமி தலைமை வகித்தார். 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொடர்ந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.