பெங்களூரு: கலால் துறை சார்பாக கிருமி நாசினி உற்பத்தி செய்ய கோரிக்கை வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.கோபாலைய்யா தெரிவித்தார். பெங்களூருவில் இது தொடர்பாக அமைச்சர் கோபாலைய்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கடந்த ஆண்டு கலால் துறைக்கு ரூ.22.700 கோடி வருவாய் ஈட்ட நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் நிர்ணயிக்கப்பட்டதை விட ரூ.400-500 கோடி கூடுதலாக வருவாய் கொடுத்துள்ளோம். மார்ச் 31-ம் தேதிக்குள் எங்கள் குறிக்கோளை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். மாநிலத்தில் அதிகரித்து வரும் போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க கலால் துறையினர் உள்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இத்துடன் கஞ்சா, போதை பொருள் விற்பனைகளை கட்டுப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் பசவராஜ்பொம்மையுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. போதை பொருள் விற்பனையை தடுப்பதே முக்கிய குறிக்கோள். கலால் துறையினர் பறிமுதல் செய்யப்படும் போதை பொருட்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் இடமுள்ளது. அதே போல் கலால் துறை சார்பாக சி.என். 7, எம்.எஸ்.ஐ.எல். கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்கு தேவையுள்ளதோ அந்த இடங்களில் பரிசீலனை செய்து அனுமதி வழங்கப்படும். நடப்பு ஆண்டின் பட்ஜெட்டில் மாநில முதல்வர் எடியூரப்பா நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்துள்ளார். துறை இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு மூன்று சக்கர வாகனம், காவலர்களுக்கு 77 வாகனங்கள், டி.சி.களுக்கு துப்பாக்கி, ஒவ்வொரு அலுவலகத்துக்கும் நான்கு வாகனங்கள், காவலர்களுக்கு சிம்கார்ட் வழங்கப்பட்டுள்ளது. தற்போது புதிய லைசன்ஸ் வழங்கும் திட்டம் அரசிடம் கிடையாது. கலால் துறையை மேம்படுத்த முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. கலால் துறை சார்பாக கிருமி நாசினி உற்பத்தி செய்ய கோரிக்கை வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இத்துடன் இது தொடர்பாக மாநில முதன்மை செயலாளர், துறை ஆணையர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்படும். அரசிடமிருந்து உத்தரவு வந்த உடனே அது செயல்படுத்தப்படும்’’ என்றார்….