கரூர், ஆக. 31: தமிழகத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை நான்கு மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலமாகும். இந்த காலக்கட்டத்தில் பெய்யும் மழை ஆண்டின் சராசரி மழையளவை எட்ட உதவி வருகிறது. கரூர் மாவட்டத்திலும் இந்த சீசனில் ஆண்டுதோறும் அதிகளவு மழை பெய்து வந்தது. ஆனால், கடந்த மூன்று மாதங்களாக குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யவில்லை. மழைக்கு பதிலாக ஆகஸ்ட் மாதம் முழுவதும் மே மாதத்தை போல சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்தது. இதன் காரணமாக அனைத்து தரப்பினரும் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தின் சில மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நேற்று அதிகாலை வரை கரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.அதன்படி, கரூர் 12 மி.மீ., அரவக்குறிச்சி 22.6 மி.மீ., அணைப்பாளையம் 46.4 மி.மீ., க.பரமத்தி 6.6., மிமீ, குளித்தலை 42 மி.மீ., தோகைமலை 18 மி.மீ., கிருஷ்ணராயபுரம் 51 மி.மீ., மாயனூர் 46 மி.மீ., பஞ்சப்பட்டி 95 மி.மீ., கடவூர் 8 மி.மீ., பாலவிடுதி 60.2 மி.மீ., மயிலம்பட்டி 20 மி.மீ., என மாவட்டம் முழுவதும் 428.40 மி.மீ., மழை பெய்திருந்தது. கரூர் மாவட்டம் முழுவதும் மூன்று மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்து கரூரை குளிர்வித்துள்ளதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.பஞ்சப்பட்டி 95 மி.மீ. பதிவு.