ஜோலார்பேட்டை : கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் இருந்து சிலர் மதுபானம் கடத்தி வருவதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரயில்வே இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயகுமார், முரளிமனோகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் வாணியம்பாடி அடுத்த சென்னாம்பட்டு பகுதியை சேர்ந்த சதிஷ்(33) என்பதும், கர்நாடகாவில் இருந்து 43 மதுபான பாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. அதேபோல் பிளாட்பாரத்தில் சுற்றி திரிந்த 2 வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் சைதாப்பேட்டை தெருவை சேர்ந்த நாகராஜ்(30), வாணியம்பாடி அடுத்த சென்னாம்பட்டு கிராமத்தை சேர்ந்த சோமசுந்தரம்(33) என்பதும், நாகராஜ் 4 மதுபான பாட்டில்கள், 112 மதுபான பாக்கெட்டுகளும், சோமசுந்தரம் 30 மதுபான பாக்கெட்டுகளும் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். …