கரூர், ஜூன் 24: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி எதிரே அனைவரின் நலன் கருதி நிழற்குடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் இரண்டு மினி பேருந்துகள் மருத்துவக் கல்லூரி வழியாக சென்று வருகிறது. இந்நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே பயணிகள் நின்று பேருந்தில் ஏறிச் செல்லும் வகையில் நிழற்குடை இல்லாமல் உள்ளது.
இதன் காரணமாக மழை மற்றும் வெயில் போன்ற சீதோஷ்ண நிலைகளில் சமாளித்து பொதுமக்கள் இந்த பகுதியில் நின்று வரும் பேருந்துகளில் ஏறிச் செல்கின்றனர். எனவே, மருத்துவக் கல்லூரி எதிரே அனைவரின் நலன் கருதி நிழற்குடை அமைத்து தர வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி நிழற்குடை அமைக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.