கரூர், செப். 24: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு அதிகளவு மக்கள் வராத காரணத்தால் வெறிச்சோடியே காணப்பட்டது. கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பகல் நேரங்களில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்து வருகிறது. இதனால், மக்கள் வேளாண் பணிகள், உறவினர் வீடுகளுக்கு செல்லுதல், சுற்றுலாத் தலங்கள், கோயில்களுக்கு செல்லுதல் உள்ளிட்ட எங்கும் செல்லமுடியாமல் வீட்டிற்குள்ளேயே தொலைக்காட்சி முன்பாக முடங்கிக் கிடக்கின்றனர். பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள், அரசு திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுக்களை வாரந்தோறும் திங்கள் கிழமையன்று, கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்படும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் அதிகாரிகளிடம் அளித்து வந்தனர்.
கடுமையான வெயில் காரணமாக மாவட்டத்தின் நெடுந்தூரத்திலிருந்து வரும் மக்கள் வராததால் கடந்த வாரம் சற்று குறைந்து காணப்பட்ட மக்கள் கூட்டம், நேற்று மிகவும் குறைவாக காணப்பட்டன. இதனால், பரபரப்புடன் காணப்படும் கலெக்டர் அலுவலக வளாகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.