தஞ்சாவூர் ஜூன் 3: தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணும் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பொதுப் பார்வையாளர் கேட்டோ சேம, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆகியோர் ஆய்வு செய்தனர். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கணினி அறையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களின் இரண்டாம் கட்ட தேர்வு குலுக்கல் முறையில் கணினியில் தேர்வு செய்யும் பணிகள் நேற்று நடைபெற்றதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தபால் வாக்குகள் எண்ணும் அறை மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக வாக்கு எண்ணும் அறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளையும், செய்தியாளர் ஊடக அறை மற்றும் கட்டுப்பாட்டு அறை மற்றும் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் உள்ளதை தேர்தல் பொதுப் பார்வையாளர் கேட்டோ சேம, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.