கூடலூர், டிச. 8: கம்பம் அருகே தோட்டத்தில் கீரை பறித்துக் கொண்டிருந்த மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. கணவர் இறந்துவிட்ட நிலையில், மகள் பராமரிப்பில் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அப்பகுதியில் கீரை விற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை மூதாட்டி அப்பகுதி தென்னந்தோப்பில் கீரை பறித்துக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த சாமாண்டிபுரம் கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்த உலகமுத்து மகன் விஜயகுமார் (23), மூதாட்டி கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. அப்போது மூதாட்டி கூச்சலிட்டதால் அவரை தாக்கி விட்டு அங்கிருந்து விஜயகுமார் ஓடி உள்ளார். அங்கிருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் கொடுத்த புகாரின்பேரில் கூடலூர் போலீசார் விஜயகுமார் மீது வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள விஜயகுமாரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.