நெல்லை : கன்னியாகுமரி – மும்பை ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரசை வரும் ஏப்ரல் மாதம் இயக்கிட ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆனால் அந்த ரயில் புனே வரை மட்டுமே இயக்கப்படும் என்பதால் பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலை குமரி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது, நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் மற்றும் பணகுடி பகுதி மக்களும் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கொரோனா பரவல் காரணமாக இந்த ரயிலின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை முன்பு ேபால் தினசரி இயக்கிட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ரயில்வே போர்டு மீண்டும் இந்த ரயிலை வரும் ஏப்ரல் மாதம் முதல் இயக்கிட திட்டமிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பும் வெளிடப்பட்டுள்ள நிலையில், இந்த ரயில் புனே வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ரயிலை முன்பு போல மும்பை வரை இயக்க வேண்டும் என மனு அனுப்பி வருகின்றனர்.இதுகுறித்து மும்பை ரயில் பயணிகள் சங்க பொதுசெயலாளர் அப்பாத்துரை கூறுகையில், ‘‘தென்மாவட்ட மக்கள் மும்பைக்கு செல்ல ரயில்கள் மிகவும் குறைவு. நெல்லையை பொறுத்தவரை இன்று வரை மும்பைக்கு தினசரி ரயில்கள் கூட இல்லை. இந்நிலையில் ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரசை புனே வரை மட்டுமே இயக்குவது, பயணிகளை பாதிக்கும். மும்பை ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் 47 ஆண்டுகளாக சென்று கொண்டிருக்கிறது. இப்போது அந்த ரயிலை புனேயில் நிறுத்துவது தமிழர்களின் உரிமைகளை பறிப்பதாகும். புனேயில் ரயில் நிறுத்தப்படும்போது, அங்கிருந்து பயணிகள் வேறு ரயில்களை பிடித்து மும்பை செல்ல வேண்டியது வரும். எனவே அந்த ரயிலை முன்பு போல மும்பை வரை இயக்கிட வேண்டும். ஏற்கனவே ஹபா உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் மும்பைக்கு புறநகர் பகுதிகள் வழியாக செல்வதால், பயணிகள் மாற்று ரயில்களை பிடிக்க வேண்டியதுள்ளது. எனவே கன்னியாகுமரி – மும்பை எக்ஸ்பிரசை பயணிகள் பயனுறும் வகையில் இயக்கிட வேண்டும்’’ என்றார்….