தர்மபுரி, டிச.19: தர்மபுரியில் இருந்து விருது பெற செல்லும் கனவு ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூங்கொத்து கொடுத்து பாராட்டினார். தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், மீத்திறன் படைத்த தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்க கனவு ஆசிரியர் செயல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 41 முதுகலை ஆசிரியர்கள் என மொத்தம் 380 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்று (19ம் தேதி) நாமக்கல் தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள அரசு விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில், 380 ஆசிரியர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன், ஜெகதீஸ்வரன், உமேஷ், மனோ, அனிதா, இளமுருகன், ஆர்த்தி, ஷாமா சுல்தானா, கலைவாணி, ஜான்பீட்டர், அமுதா, உஷாநந்தினி, கவிப்பிரியா, செந்தில்செல்வம் ஆகிய 14 ஆசிரியர்கள், கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விருது பெறுவதற்காக வாழ்த்தி வழியனுப்பும் விழா நேற்று முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, மாவட்ட கல்வி அலுவலர்கள் விஜயகுமார், இஸ்மாயில், மான்விழி உள்ளிட்ட அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து, வழியனுப்பி வைத்தனர்.