திருப்புத்தூர், அக்.21: திருப்புத்தூர் அருகே காரையூர் கண்மாயில் நேற்று குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். திருப்புத்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுல்தான்பாட்ஷா. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மாபுஜான்(15). தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர், நேற்று விடுமுறை என்பதால் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கண்மாயில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மாபுஜான் நீரில் மூழ்கியுள்ளார். அதனைக் கண்ட நண்பர்கள் இருவரும் அளித்த தகவலின் பேரில் கிராம மக்கள் காப்பாற்ற முயன்றும் மாணவன் உயிரிழந்தார். இதுகுறித்து கண்டவரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.