பரமக்குடி, செப். 23: பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், வேந்தோணி ஊராட்சியில் பெரிய கண்மாய் உள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கண்மாயில் உள்ள நீரின் நிறம் பச்சையாக மாறி இருப்பதுடன், மீன்கள் செத்து மிதக்கின்றன. ஏராளமான மீன்கள் கரை ஒதுங்கி கிடக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில், வேந்தோணி ஊராட்சி மூலம் கண்மாய் மீன்களை பிடிக்க தாசில்தார் ரவி ஏலம் விட்டார்.
ஆனால், இதே ஊரை சேர்ந்த மற்றொரு தரப்பினர் கண்மாயில் உள்ள நீரை வெளியேற்றினால் விவசாயம் பாதிக்கப்படும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். இதனால் கண்மாயில் மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, துர்நாற்றம் வீசுவதால் செத்து ஒதுங்கிய மீன்களையாவது அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.