மதுரை, அக். 9: கணவரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய கோரிய மனைவியின் மனு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது. திருச்சியை சேர்ந்த ஷாலினி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எனது கணவர் திராவிட மணி, கடந்த செப். 26ல் வீட்டிற்கு திரும்பினார். அப்போது 63 மது பாட்டில்களை என் கணவர் சட்டவிரோதமாக வைத்திருந்ததாக கூறி ஜீயபுரம் போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு கொண்டு சென்றபோது, உடல்நலம் பாதித்ததாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக கூறினர். போலீசார் தாக்கியதால் தான் எனது கணவர் இறந்துள்ளார். எனவே, கணவரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முரளிசங்கர், ‘‘பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையையும் வழங்கியுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் ஒரு காயம் 4 நாட்களுக்கு முன்னும், மற்றொரு காயம் 2 வாரங்களுக்கு முன்பும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மறுபிரேத பரிசோதனைக்குரிய காரணங்களை மனுதாரரர் தரப்பில் கூறாததால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டார்.