ஆவடி: கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், காமராஜர் நகர், 3வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (33). லாரி டிரைவர். குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி அன்னபூரணி (28). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு ஹரிபிரியா (5) என்ற மகளும், கோபிகிருஷ்ணன் (3) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம் மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், அவருக்கும், மனைவி அன்னபூரணிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுமுகம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பின்னர், இரவு 10 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் முன்கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. ஆறுமுகம் ஜன்னல் வழியாக படுக்கை அறையை எட்டிப்பார்த்தார். அப்போது, அங்கு மின்விசிறியில் புடவை மூலம் அன்னபூரணி தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டு முன்கதவை உடைத்து உள்ளே சென்று அன்னபூரணியை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அன்னபூரணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜிவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர்….