ஊட்டி, ஜூலை 19: ஊட்டி ஏடிசி மணிகூண்டு அருகே பழமை வாய்ந்த மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்துவதற்காக இடித்து புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. இதனால் ஒருபகுதி மார்க்கெட் கடைகள் ஏடிசி பகுதியில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு சில கடைகளுக்கு கதவு, பூட்டு இல்லாமல் விற்பனை முடிந்ததும் தார்பாய் பயன்படுத்தி மூடி வைத்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி மார்க்கெட்டில் ஒரே நேரத்தில் 7 கடைகளில் திருட்டு நடந்துள்ளது.
இதில் இலை கடை வைத்துள்ள சங்கீதா என்பவர் கடையில் மட்டும் ரூ.7 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது. வியாபாரிகள் ஊட்டி நகர மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ஊட்டி நேரு நகர் பகுதியை சேர்ந்த லட்சுமணன்(52) என்பவரே திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட லட்சுமணன் கடந்த சில மாதங்களாக ஊட்டி மார்க்கெட் காவலாளியாக பணியாற்றி வந்ததுடன், திருட்டில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.