சென்னை: கொரோனா நோயாளிகள் குறித்து மியாட் மருத்துவர்கள் எழுதியுள்ள கட்டுரை புகழ்பெற்ற மருத்துவ இதழான ‘குளோபல் எபிடெமியாலஜி அண்ட் குளோபல் ஹெல்த்’ பத்திரிகையில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா முதல் அலையும், 2வது அலையும் வேறுபட்டவை அல்ல. இயற்கையில் இரண்டும் ஒன்றே. கடந்த ஆண்டில் ஸ்வாப் பரிசோதனை செய்யவே பலர் தயக்கம் காட்டினர். ஆனால், தற்போது இது மாறிவிட்டது. பரிசோதனையில் பாஸிட்டிவ் முடிவை பெற்றவர்கள் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் உதவியுடன் நிலையை கண்காணித்து சமாளிக்கலாம் என்று கருதுகின்றனர். இறுதி கட்டத்திலேயே அவர்கள் சிடி அல்லது ரத்த பரிசோதனை செய்கின்றனர். இதில் நிமோனியா தெரியவரும்போது, நோயாளி உடனடியாக சரியான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.கொரோனா பாஸிட்டிவ் என்பது தீவிர நிலை அல்ல. ஆனால், கொரோனா உடன் கடுமையான நிமோனியா இருந்தால், இறப்பு விகிதம் அதிகமாகவும், நோயிலிருந்து விடுபட நீண்ட காலம் ஆகவும் வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு வயதானவர்கள் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது அவர்களில் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுள்ளனர். 40 முதல் 50 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் ஆபத்தில் உள்ளனர்.2வது அலையில் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், தடுப்பூசிக்கு பிறகும் ஒருவருக்கு பாஸிட்டிவ் நிலை ஏற்பட்டால், அவர் கொரோனா நிமோனியாவால் அவதிப்படுவதில்லை. இது தடுப்பூசி போடப்படுவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது….