வருசநாடு, ஜூன் 19: கடமலை-மயிலை ஒன்றியத்தில் 5 மாவட்ட மக்களின் தண்ணீர் தேவைக்கு ஆதாரமாக உள்ள மூல வைகை ஆற்றில் இறைச்சிக் கோழி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பிராய்லர் கோழி கழிவுகளை சமூக விரோதிகள் மூல வைகை ஆற்றில் கொட்டி வருகின்றனர். இதனை தொடர்ந்து மூல வைகை ஆற்றில் கடந்த சில மாதங்களாக மாசடைந்து வருவதாகவும் இதற்கு ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த கோழி கழிவுகளை அப்பகுதிகளில் உள்ள தெரு நாய்கள் அதிக அளவில் உணவாக அருந்துவதால்தெருநாய்களுக்கு நோய் பரவி வருவதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
மூலவைகை பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிவது சுகாதாரக்கேட்டை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் அந்தப் பகுதிக்கு செல்ல பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இது சம்பந்தமாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் ஆதாரத்தை மாசடையாமல் பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும் மூலவைகை பகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.