சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். உரையின் விவரம் வருமாறு: மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் 1,374 பேரும் – நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் 3,843 பேரும் – பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் 7,608 பேரும் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். அதாவது 12 ஆயிரத்து 825 பேர் பல்வேறு பொறுப்புகளில் உட்கார இருக்கிறார்கள். இந்தப் பதவிகளில் திமுகவின் வேட்பாளர்கள், நமது கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள் என்ற செய்தி எனக்கு வந்தாக வேண்டும்.நீட் தேர்வு விவகாரத்திலும் திரும்பத் திரும்ப ஒரு பொய்யை அதிமுக சார்பில் சொல்லி வருகிறார்கள். காங்கிரசும் திமுகவும் சேர்ந்துதான் நீட் தேர்வையே கொண்டு வந்தார்கள் என்று கூசாமல் பொய் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். நீட் தேர்வு செல்லாது என்று தி.மு.க. அரசும் தொடுத்துள்ள வழக்கில் உச்சநீதிமன்றம் 18.7.2013 அன்று தீர்ப்பளித்தது. 2014ம் ஆண்டு ஒன்றிய அரசில் ஆட்சி மாறியது. இதனால் காட்சியும் மாறியது. நீட் தேர்வுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி – தனியார் நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றம் சென்றது. 11.4.2016 அன்று தடையை நீக்கியது உச்சநீதிமன்றம். இதன்பிறகு 24.5.2016 அன்று நீட் தேர்வை நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பாஜ அரசு கொண்டு வந்தது. அதன்பிறகு தான் நீட் தேர்வு உயிர்பெற்றது. அதாவது 2011ம் ஆண்டே இந்த விவகாரத்துக்கு காங்கிரஸ் ஆட்சி முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஆனால் அதை 2016ம் ஆண்டு தூசிதட்டி எடுத்தது பா.ஜ.க. அரசுதான். பழனிசாமி ஆட்சிக்கு வந்த பிறகுதான் நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஆளுநரிடம் கேட்பதற்கு பயந்து-ஒன்றிய பாஜக அரசிடம் கேட்பதற்கு பயந்து – பதுங்கியதன் விளைவாகத்தான் நான்காண்டுகாலமாக தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடந்ததே தவிர வேறல்ல. பச்சை பொய்’ பழனிசாமியும் – ஓ.பன்னீர்செல்வமும்- தி.மு.க. ஆட்சியில் – தமிழ்நாட்டில் எந்தத் தேர்வு மையத்தில் நீட் தேர்வு நடந்ததென்று சொல்லத் திராணி உள்ளதா? ஏழை, எளிய – கிராமப்புற மாணவர்கள் – அரசுப் பள்ளி மாணவர்கள் – மருத்துவக் கல்லூரிக்குள் கடந்த நான்காண்டுகள் நுழைய முடியாமல் போனதற்கு யார் காரணம்? அதற்குப் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் பதில் சொல்லட்டும். அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய ரெய்டுகளின் மூலமாக அவர்களின் லட்சணம் வெளிச்சத்துக்கு வரவில்லையா?ஈரோடு மாவட்டம் என்பது திமுகவின் கோட்டை என்பதை நிரூபித்தாக வேண்டும். தந்தை பெரியார் பிறந்த ஊர். பேரறிஞர் அண்ணா அவர்கள் வாழ்ந்த ஊர். நம்முடைய தலைவர் கலைஞர் பயின்றதும் ஈரோட்டில்தான். இப்போது ஈரோட்டு அரசியல்தான் இன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் நடக்கிறது. தந்தை பெரியாரின் சமூகநீதிதான் இன்று உத்தரபிரதேச அரசியலில் எதிரொலிக்கிறது. நாட்டில் இன்றைக்கு மதவாதத்துக்கு எதிர்ச்சொல் தந்தை பெரியார்தான். அதற்கு முக்கியக் காரணம் என்ன தெரியுமா? தமிழ்நாட்டில் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் ஏற்றிவைத்த சமூகநீதி தீபம்தான். இந்த மாபெரும் தலைவர்களின் வழியைப் பின்பற்றி, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி, இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமுள்ள மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீட்டை மருத்துவக் கல்வியில் உறுதிசெய்தது திமுக தான். இதனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமுள்ள இளைஞர்கள் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கிறார்கள். திமுகவை நம்பிக்கையோடு பார்க்கிறார்கள். அந்தப் பெருமையோடுதான் தந்தை பெரியார் மண்ணில் அமர்ந்துகொண்டு இருக்கும் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்களும் அதே உணர்வோடு ஈரோடு மாவட்டத்தில் முழு வெற்றியை வாரி வழங்குங்கள். உதயசூரியனை உங்களது இதயசூரியன் என்று நெஞ்சில் ஏந்திக் களப்பணி ஆற்றுங்கள். திமுக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். வெற்றிவிழாவில் நிச்சயம் உங்களைச் சந்திக்க நான் வருவேன். இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாட்டு இளைஞர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமுள்ள இளைஞர்கள் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கிறார்கள். திமுகவை நம்பிக்கையோடு பார்க்கிறார்கள்….