வேலூர், ஜூலை 27: வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் கஞ்சா வழக்கில் கைதான 13 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநில எல்லைப்பகுதிகளில் போலீசார் குழுக்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். மாநிலத்தில் கஞ்சா விற்பனை செய்வோரின் வங்கி கணக்குகளை முடக்க டிஜிபி உத்தரவிட்டிருந்தார். அதன்படி வேலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்துவோரை கைது செய்து, குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைதானவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி முதல் நேற்று முன்தினம் (25ம் தேதி) வரை 10 நாட்களில் மொத்தம் 12 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 13 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.