புதுடெல்லி: மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தில், அடுத்தாண்டு முதல் பயணம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கும் அனுப்புவதற்கு, ‘ககன்யான்’ திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவமான இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. கொரோனா காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் டெல்லியில் நேற்று அளித்த பேட்டி வருமாறு:நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் நிலவி வந்தது. கொரோனா பரவல் காரணமாக, இந்திய விண்வெளி வீரர்கள் ரஷ்யாவில் பயிற்சி பெறுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை பயணம், 2024 இறுதியில் மேற்கொள்ளப்படும். இதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ தீவிரமாக செய்து வருகிறது. இதைத் தொடர்ந்து, பெண் உருவத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள ரோபோ ‘வியோம்மித்ரா’ விண்வெளிக்கு அனுப்பப்படும். இந்திய விமான படையை சேர்ந்த 4 விமானிகள், ககன்யான் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவில் பயிற்சி பெறுகின்றனர். முதல் பயணத்தின்போது 15 கிமீ தொலைவில் உள்ள புவி சுற்றுப் வட்டப்பாதையில் ககன்யான் நிலை நிறுத்தப்படும். அப்போது, 2 விண்வெளி வீரர்கள் அனுப்பப்படுவார்கள். அதன் வெற்றியை பொருத்து, 2வது பயணத்தின் சுற்று வட்டப்பாதையின் உயரம் அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்….