சென்னை: ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மருத்துவ தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்று தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் மற்றும் கொரோனா காலம் முடிந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி சென்னை பன்னோக்கு மருத்துவமனை முன்பு நேற்று காலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவல்லிக்கேணி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம் தடை செய்யப்பட்ட பகுதியில் போராட்டத்தில் ஈடுபட கூடாது என்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் எங்களை பணி நிரந்தரம் செய்யும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறி, யாரும் எதிர்பார்க்காத நிலையில் மருத்துவமனை முன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 450 செவிலியர்களை அதிரடியாக கைது செய்தனர். பிறகு அனைவரையும் திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நல கூடத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர். இந்நிலையில் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் 487 செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது….