சின்னமனூர், ஆக. 24: கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை ஆக.29ம் தேதி கொண்டாட இருப்பதால், சின்னமனூர் ஏலச்சந்தைக்கு கேரளா காய்கறி வியாபாரிகள் படை எடுப்பு அதிக அளவில் இருக்கும். ஆனால் இன்னும் ஓணம் பண்டிகை கொண்டாட ஒரு வாரமே உள்ள நிலையில் ஏலச்சந்தையில் கேரள காய்கறி வியாபாரிகளின் வரவு மிகக் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்பண்டிகையொட்டி சின்னமனூர் சுற்று கிராமங்களிலிருந்து தினந்தோறும் டன் கணக்கில் காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு ஏலச்சந்தையில் தேக்கி வைப்பர். இது வரை விற்றது போக 300 டன் வரை காய்கறிகள் தேங்கி கிடக்கிறது. தொடர்ந்து காய்கறிகள் தேங்குவதால் விலையும் சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஏல வியாபாரி அக்கீம் கூறுகையில், ‘‘கேரளாவில் நடக்கும் ஓணம் பண்டிகை விழாவிற்கு எப்போதும் விற்பனை அமோகமாக இருக்கும். நடப்பாண்டில் சரிவர காய்கறிகள் வாங்க கேரள வியாபாரிகள் வராததால் ஏலச்சந்தையில் டன் கணக்கில் காய்கறிகள் தேங்கியிருகிறது. இதனால், நஷ்டத்தின் பிடியில் விவசாயிகளும், வியாபாரிகளும் சிக்கி உள்ளனர்’’ என்றார்.