சேலம், டிச.21: சேலம் செவ்வாய்பேட்டை லைன் மேடு பகுதியில் உள்ள ஓட்டலில் சப்ளையராக பணியாற்றி வருபவர் மணிகண்டன்(38). இந்த ஓட்டலுக்கு நேற்றுமுன்தினம் 40வயது மதிக்கதக்க நபர் சாப்பிட வந்தார். அவர் உணவு ஆர்டர் செய்தார். அந்த உணவை சப்ளையர் மணிகண்டன் எடுத்து வந்தபோது அந்த சாப்பாடு வேண்டாம் என தெரிவித்தார். இதுதொடர்பாக மணிகண்டனுக்கும் அந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த நபர் மணிகண்டனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினார். இதுபற்றி மணிகண்டன் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.