நாகர்கோவில் : இயற்கையை பேணி காக்க தவறியதன் விளைவு தற்போது பருவநிலை மாற்றங்கள் நிகழ்ந்து பல்வேறு இன்னல்களை மனித குலம் சந்தித்து வருகிறது. குறிப்பாக கட்டிடங்கள், சாலைகள், வணிக வளாகங்கள், பஸ் நிலையங்கள், பார்க்கிங் நிலையங்கள் என பல்வேறு காரணங்களுக்காக நகர்ப்புறங்களில் மரங்களும், நீர் நிலைகளும் அழிக்கப்பட்டு விட்டன. இதன் விளைவு நகர்ப்புறங்களில் தட்ப வெப்ப நிலை மாறியதுடன், நிலத்தடி நீர் மட்டமும் வேகமாக குறைந்தது. இதனால் மக்கள் எதிர் கொள்ள போகும் விளைவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இனி வரக்கூடிய தலைமுறைகள் மிகப்பெரிய பேரழிவை சந்திக்க வேண்டி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை சமாளித்து, பருவநிலை மாற்றங்களை சமன் செய்ய முடியா விட்டாலும் கூட, இயற்கையை சமாதானம் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போதைய ஒன்றிய அரசு கையில் எடுத்துள்ள திட்டம் தான், குறுங்காடுகள் திட்டம் ஆகும். இதை மியோ வாக்கி காடுகள் என்கிறார்கள். ஜப்பான் வல்லுனர்கள் உருவாக்கிய இந்த மியோ வாக்கி திட்டங்களை, வளர்ந்த நகரங்களில் செயல்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. பல்வேறு தன்னார்வலர்கள், இயற்கை ஆர்வலர்களுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அந்த வகையில் நாகர்கோவில் மாநகராட்சியும் மியோ வாக்கி காடுகள் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. நாகர்கோவில் மாநகரில் தட்ப வெப்ப நிலை மாறி உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. நிலத்தடி நீர் மட்டத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. கோடை காலங்களில் மிகப்பெரிய தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் மரங்கள் அழிக்கப்பட்டதே ஆகும். எனவே குறுங்காடுகள் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் திட்டமிட்டுள்ளார். இதற்கான நிதி ஒதுக்கீடு இல்லை என்பதால் முழுக்க, முழுக்க தனியார் பங்களிப்புடன் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் குறுங்காடுகளின் திட்டத்தின் கீழ் மரங்கள் நடப்படும். மரங்கள் நெருக்கமான முறையில் நடப்படும் போது மிக வேகமாக வளரும் தன்மை ெகாண்டவை ஆகும். 25 வருடங்கள் வளர்ந்து பலன் தர வேண்டிய மரங்களை மிக வேகமாக 10 அல்லது 15 ஆண்டுகளுக்குள் முழு திறனை கொண்டு வரும் வகையில் தான் குறுங்காடுகள் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரே பகுதியில் 150, 200 மரங்கள் நடப்பட்டு இருக்கும். ஆலமரம், அரச மரம் போன்ற மரக்கன்றுகள் இல்லாமல், வேம்பு, பூவரசு, மலைப்பூவரசு, வாதமரம் போன்ற காட்டு மரங்கள் நடப்படும். அதிக பட்சமாக 1000 சதுர அடி இடத்தில் சுமார் 2 அடி இடைவெளியில் 300, 350 மரங்கள் வரை நடப்படும் போது, அவை போட்டி போட்டு வளர்ந்து மிகப்பெரிய காடுகளாக மாறும். இதன் மூலம் அந்த பகுதியில் இயற்கையையும் பாதுகாக்க முடியும். சமீபத்தில் இந்த குறுங்காடுகள் திட்டத்தை ஆணையர் ஆஷா அஜித், வல்லன்குமாரன்விளை பகுதியில் தொடங்கி வைத்தார். மாநகர பகுதிகளில் மொத்தம் 6 இடங்களை குறுங்காடுகள் திட்டத்துக்காக மாநகராட்சி தேர்வு செய்துள்ளது. இந்த பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள், அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மரங்களை நட்டு முறையாக பராமரிக்க வேண்டும். மாநகராட்சி தனக்கு ெசாந்தமான இடத்தை குறுங்காடுகள் திட்டத்துக்காக வழங்கும். ஆனால் தொடர்ந்து முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய கொள்கை ஆகும். இந்த திட்டம் முறையாக செயல்பட்டால் விரைவில் நாகர்கோவிலில் குறுங்காடுகள் ரம்மியமாக காட்சி தரும் என்பது நம்பிக்கை ஆகும்.பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்மரக்கன்றுகளை நட்டு வைத்து ஆணையர் ஆஷா அஜித் கூறுகையில், உலகம் முழுவதும் குறுங்காடுகள் திட்டம் வேகமாக வளர்ந்து வருகிறது. மியோவாக்கி முறை என்பது, இடைவெளி இல்லா அடர்காடுகள் ஆகும். இந்த முறையில் காடுகளை வளர்க்க தேவையானது 2 விஷயம் தான். ஒன்று காலியிடம் வேண்டும். மற்றொன்று தேவையான உரம். மாநகராட்சியே தற்போது கழிவுகள் மூலம் உரம் தயாரிக்கிறது. இதை குறுங்காடுகளுக்கு பயன்படுத்த முடியும். ஆனால் இடம் மிகப்பெரிய பிரச்சினை ஆகும். நாகர்கோவில் மாநகராட்சி தேர்வு செய்துள்ள இடத்தில் முறைப்படி இந்த திட்டத்தை செயல்படுத்த மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். தன்னார்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் ஆர்வத்துடன் முன் வர வேண்டும். குட்டி, குட்டி காடுகளை உருவாக்குவதன் மூலம் மழை ஈர்ப்பு மையமாக கூட மாறும். இதன்மூலம் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றார்.உயிரினங்களுக்கு வாழ்வளிக்கும்குறுங்காடுகள் திட்டத்தின் மூலம் நெருக்கமாக மரங்கள் நடப்படும் போது, காற்றின் ஈரப்பதத்தை தக்க வைக்க முடியும். பறவைகள், புழு, பூச்சிகள், தேனீக்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும். நெருக்கமான மரங்களால் வெப்பம் குறையும்…