விருதுநகர், ஆக.30: விருதுநகரில் கடந்த சில மாதங்களாகவே அக்னியை போல் வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 4.40 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர் கனமழை பெய்தது. வெயிலின் வெப்பத்தில் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு நேற்று பெய்த கன மழை குளிர்ச்சியை கொடுத்ததால் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கனமழையால் நகரின் தாழ்வான பகுதிகளான பழைய பஸ் நிலையம், புல்லாலக்கோட்டை ரோடு, சாத்தூர் ரோடு, தர்காஸ் தெரு, மொன்னி தெரு, மேலத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி தேங்கியது. சில இடங்களில் குடியிருப்புகளில் கழிவுநீர் கலந்து புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டனர்.