பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம் தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி தொட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்(35). இவரது மனைவி மனோன்மணி (29). இவர்களுக்கு நிலாகினி என்ற 3 வயது பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இதில், நிலாகினி அதிக ஞாபகசக்தி கொண்ட குழந்தையாக இருப்பதை அறிந்த அவரது தாய் மனோன்மணி குழந்தைக்கு இந்தியாவில் உள்ள மாநில தலைநகரங்களின் பெயர்களை சொல்லிக் கொடுத்துள்ளார். மிகுந்த ஆர்வமுடன் அதனை கற்றுக்கொண்ட நிலாகினி 59 வினாடிகளில் அனைத்து மாநில தலைநகரங்களின் பெயர்களை விரைவாக கூறியது. இதனை கண்டு ஆச்சரியமடைந்த தாய் மனோன்மணி அதனை வீடியோவாக பதிவு செய்து கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்புக்கு அனுப்பி வைத்தார். இதனை அங்கீகரித்து அவர்களும் அந்த குழந்தைக்கு சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதே போன்று இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பும் தற்போது குழந்தையின் திறமையை அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் குழந்தை பல்வேறு விஷயங்களை ஆர்வமுடன் கற்று வருவதால் அவரது தாய் மனோன்மணி குழந்தைக்கு தற்போது உலக நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை கற்றுக் கொடுத்து வருகிறார். குழந்தையின் திறமையை கண்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். …