திருவாரூர், ஜூலை 6: ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூரில் திமுக வழக்கறிஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தண்டனை சட்டங்களில் 3 சட்டங்களை வடமொழி சொற்களில் பெயர் மாற்றியுள்ளதை கண்டித்தும், இதனை உடனடியாக திரும்ப பெற கோரியும், ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் கடந்த 1ம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட திமுக வழக்கறிஞரணி மற்றும் கூட்டணி கட்சி வழக்கறிஞரணியினர் சார்பில் நேற்று திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் விநாயகமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வக்கீல் பஞ்சமூர்த்தி மற்றும் பொறுப்பாளர்கள் மகாலெட்சுமி, வீரக்குமார், கோவி.கண்ணன் உட்பட பல்வேறு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.