திண்டுக்கல், நவ.22: திண்டுக்கல்லில் பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் அமையப்பெற்றுள்ள உணவுப் பதப்படுத்தும் அலகுகளுக்கான 5 ஏக்கர் காலி நிலத்தினை, உணவுப் பதப்படுத்தும் மற்றும் மதிப்புக்கூட்டும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்து தெரிவித்ததாவது: பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் மானிய நிதியுதவியுடன் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர் கிராமம், உட்கடை தங்கம்மாபட்டியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.29.02 கோடி மதிப்பில் உணவு பதப்படுத்தும் தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் திண்டுக்கல் விற்பனைக்குழு இத்திட்டத்தினை செயல்படுத்திடும் திட்ட செயல்பாட்டு முகமையாக உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2,500 மெ.டன் கொள்ளளவு கொண்ட ஒரு சேமிப்பு கிட்டங்கி, 5,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிட்டங்கி வசதி, பழங்கள் பழுக்க வைக்கும் அறை, தரம் பிரிப்பு மையம், அலுவலகக் கட்டிடம், மின்னணு எடை மேடை மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் 5 ஏக்கர் நிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
உணவுப் பதப்படுத்தும் மற்றும் மதிப்புக்கூட்டும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நிலத்தினை குத்தகை அடிப்படையில் பயன்படுத்துவது தொடர்பான நிறுவனங்களின் குத்தகை தொகையினை கருத்துருவாக சமர்ப்பிக்க வேண்டும். கருத்துருக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அரசுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.கூட்டத்தில், வேளா ண்மை இணை இயக்குநர் அனுசுயா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கமலக் கண்ணன், துணை இயக்குநர் விஜயராணி, திண்டுக்கல் விற்பனைக் குழு செயலாளர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.