நெல்லை: நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஒன்றரை மணி நேரத்தில் 1330 திருக்குறளையும் சொல்லிக்கொண்டே 13 அடி அகலம், 30 அடி உயர திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்து 7ம் வகுப்பு மாணவி லக்ஷனா சாதனை படைத்துள்ளார். திருவள்ளூரைச் சேர்ந்த செந்தில்குமார், சாந்தி தம்பதியரின் மகள் லக்ஷனா. ஸ்ரீ நிகேதன் பாடசாலை பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் இம்மாணவி கொரோனா கால கட்டத்தில் நெல்லை தியாகராஜநகரில் உள்ள பாட்டி ராமலட்சுமியின் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் படித்து வருகிறார். மேலும் கடந்த ஓராண்டு காலமாக சிவராம் கலைக்கூட ஓவிய ஆசிரியர் கணேசன் என்பவரிடம் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இம்மாணவி நேற்று நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமையில், பொதுமக்கள் முன்னிலையில், 1330 திருக்குறளையும் சொல்லிக்கொண்டே 13 அடி அகலம், 30 அடி உயரத்தில் கன்னியாகுமரியில் இருப்பதுபோல் திருவள்ளுவரின் முழு உருவ ஓவியத்தை ஒன்றரை மணிக்குள் வரைந்து சாதனை படைத்துள்ளார். இந்நிகழ்வு இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு மற்றும் கலாம் புக் ஆப் அவார்டு சாதனை புத்தகங்களில் இடம்பெற உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட நூலகர் மீனாட்சிசுந்தரம், பொதிகை தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா, ஓவிய ஆசிரியர் சிவராம்கிருஷ்ணன், சுங்கவரித் துறை அலுவலர் காக்கும்பெருமாள், முருகன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சாதனை படைத்த மாணவி லக்ஷனாவை பாராட்டினர். …