மதுரை, ஜூலை 5: ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற கோரி ஐகோர்ட் மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் ஐகோர்ட் கிளை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்எம்பிஏ தலைவர் ஐசக்மோகன்லால், எம்பிஎச்ஏஏ தலைவர் ஆண்டிராஜ், மூத்த வழக்கறிஞர்கள் அஜ்மல்கான், லஜபதிராய், வழக்கறிஞர்கள் ஹென்றிடிபேன், ஜான் வின்சென்ட், வாமணன், அன்பரசு, முத்துகிருஷ்ணன் உள்பட பலர் பேசினர். இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் ஐசக்மோகன்லால் கூறுகையில், ’புதிய குற்றவியல் சட்டத்தில் எவ்விதமான பெரிய மாற்றங்களும் இல்லை. ஆங்கில ஆட்சியில் இல்லாத அளவுக்கு, அதைவிட மோசமான அடக்குமுறையை கொண்டு வரும் வகையில் திருத்தங்கள் உள்ளது. புதிய சட்டத்தில் ஜாமீன் கிடைப்பது கடினம் என்ற அளவில் உள்ளது.
தீவிரவாதம் என்ற வார்த்தையின் கீழ் பல்வேறு செயல்முறைகள் கொண்டு வரப்பட்டு ஜாமீன் கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள் சமஸ்கிருத வார்த்தைகளில் இயற்றப்பட்டிருப்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அவசர கதியில் சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். இந்த சட்டத்தை திரும்ப பெற்று, நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதம் நடத்தி தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.