அந்தியூர்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தை மாதம் முதல் நாள் கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இந்த திருநாளை கரும்பு, இனிப்பு, பொங்கலுடன் கொண்டாடி மகிழ்வர். இது மட்டுமின்றி விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இரண்டாம் நாள் உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.மண்பானை, கரும்பு, மஞ்சள், பச்சரிசி, வெல்லம் உள்ளிட்டவைகள் பொங்கல் அன்று முக்கிய பங்கு வகிக்கும். அன்றைய தினம் மண்பானையில் பொங்கல் வைத்து, மக்கள் சூரிய வழிபாட்டை மேற்கொள்வர். நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புற மக்கள் அதிக உற்சாகத்துடன் இவ்விழாவை கொண்டாடுவர். இதேபோல் விவசாயிகள் தை இரண்டாம் நாளன்று உழவர் திருநாளையொட்டி உழவுக்கு நன்றி செலுத்தும் விதமாக அந்த நாளை உற்சாகமாக கொண்டாடுவர்.இதற்காக உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு அன்று நாள் முழுவதும் ஓய்வு கொடுக்கப்படும். தொடர்ந்து விவசாயிகள் கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி அழகுபடுத்துவர். மேலும் முக்கானம் கயிறு, கழுத்து கயிறு உள்ளிட்ட புது கயிறுகளை வாங்கி வந்து மாடுகளுக்கு கட்டிவிடுவர். இதேபோல் ஆடுகளுக்கும் குதிரைகளுக்கும் கலர் பொடி மூலம் அலங்கரிப்பர். தொடர்ந்து தங்களது கால்நடைகளுக்கு நோய் நொடிகள் வராமல் இருக்க மண்பாண்ட தொழிலாளர்களிடம் இருந்து கால்நடை உருவ பொம்மைகளை வாங்கி வந்து முதலில் தங்களது விவசாய நிலங்கள் மற்றும் அருகில் உள்ள இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வ கோயிலுக்கு செல்வர். அங்கு முதலில் கால்நடை உருவபொம்மைகளை வைத்து தங்களது கால்நடைகளுக்கு எந்த ஒரு நோய் நொடியும் வராமல் இருக்க வேண்டி சிறப்பு பூஜைகள் மேற்கொள்வர். தொடர்ந்து தங்களது மாட்டு தொழுவத்தில், பொங்கல் வைத்து மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை முன்னிறுத்தி சிறப்பு பூஜைகள் செய்வர். பின்பு கால்நடைகளுக்கு சர்க்கரைப் பொங்கல், கரும்பு, பழம் உள்ளிட்ட உணவுகளை வழங்கி வழிபடுவர். தற்போது அந்தியூரில் மாட்டுப்பொங்கல் அன்று விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு நோய் நொடிகள் வராமல் ஆரோக்கியத்துடன் இருக்கும் பொருட்டு தங்களது விவசாய நிலங்கள் மற்றும் அருகில் உள்ள தங்களது இஷ்ட தெய்வ கோயில்களில் கால்நடை உருவ பொம்மைகளை வாங்கிச் சென்று வைத்து வழிபடுவதற்காக, கால்நடை பொம்மை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் மாடு, கன்று குட்டி, நாய், குதிரை, ஆடு உள்ளிட்ட கால்நடைகளின் உருவ பொம்மைகள் ஒரு அடி முதல் 5 அடி வரை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பொங்கல் பண்டிகைக்காக ஒரு கிலோ முதல் 10 கிலோ அரிசி வரை சமைக்கும் பொங்கல் பானைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை ரூ.100 முதல் ரூ ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், மாட்டு பொங்கலின் போது கால்நடைகளின் உருவ பொம்மைகளை வைத்து வழிபடுவதற்காக, அந்தியூர் பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள், கால்நடைகளின் உருவங்கள், பொங்கல் பானை ஆகியவற்றை தயார் செய்யப்பட்டு வருகிறது. இது உள்ளூர் மட்டுமின்றி அம்மாபேட்டை, சித்தோடு ஈரோடு, எடப்பாடி, கொங்கணாபுரம், பவானி, ஆப்பக்கூடல், அத்தாணி, கோபி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பட்டு வருகின்றன கால்நடை பொம்மைகள் செய்வதற்கு விவசாயிகளிடம் இருந்து அதிக அளவு ஆர்டர்கள் வருகின்றன. மேலும் பொங்கலுக்கு பானைகளும் அதிக அளவு ஆர்டர்கள் வந்த போதிலும், மண் போதிய அளவு கிடைக்காததால் ஆர்டர்களுக்கு தேவையான அளவு செய்ய முடியவில்லை, தற்போது குட்டை, ஏரிகளில் நீர் நிரம்பியுள்ள நிலையில், அங்கு மண் எடுக்க முடியவில்லை. எனவே பட்டா பூமியில் தான் மண் எடுக்க வேண்டும். பட்டா பூமியில் மண் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து நலிந்த வரும் மண்பாண்ட தொழிலை காப்பாற்றும் வகையில் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ள காலகட்டங்களில் பட்டா நிலங்களில் மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும். ஒரு மண்பாண்டம் செய்ய தரமான களிமண் கிடைக்க வேண்டும். அவ்வாறு கிடைக்கின்ற மண்ணை பதப்படுத்தி கால்நடை உருவ பொம்மைகளோ, கலையங்களோ, பானைகளோ உள்ளிட்ட மண்பாண்டங்கள் செய்து காயவைத்து சூளையில் வைத்து சுட்டு, அது எந்த ஒரு பாதிப்பு இல்லாமல் இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய முடியும். ஒருவேளை சூளையில் வைத்து சுடும்போது விரிசல் ஏற்பட்டால் சுமார் ஒரு வாரம் பட்ட கஷ்டம் அனைத்தும் வீணாகிவிடும். எனவே இவ்வளவு சிரமங்களுக்கு இடையே இந்த தொழில் செய்து வரும் நிலையில் தரமான மண் கிடைப்பதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றார்….