ஈரோடு, ஏப். 11: மொடக்குறிச்சி அடுத்துள்ள கணகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள எள் விதைப்பண்ணையில் விதைச்சான்ற அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் தலைமை தாங்கி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கினார். பயிற்சியில் எள் மகசூல் திறன், குணாதிசயங்கள், வயலாய்வு மேற்கொள்ளும் நடைமுறைகள், கலவன்களை கண்டறிதல் மற்றும் அவற்றை அகற்றும் முறைகள் குறித்து விதைச்சான்று அலுவலர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
நிலக்கடலை பயிர் உற்பத்தி மற்றும் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பற்றி சாகுபடியாளருக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது, நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி ஆயக்கட்டு பாசனப்பகுதியில் எண்ணெய்வித்து பயிர்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் எள் மற்றும் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். எள் பயிரில் டிஎம்வி 3, டிஎம்வி 4 , விஆர்ஐ, டிஎம்வி 7 ஆகிய ரகங்களின் ஆதாரநிலை விதைப்பண்ணைகள் மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே விதைச்சான்று அலுவலர்களுக்கு களப்பயிற்சி வழங்கப்பட்டது. இவ்வாறு கூறினர். பயிற்சியின்போது ஈரோடு மாவட்ட விதைச்சான்று அலுவலர்கள், விதைச்சான்று அலுவலர்ராதா மற்றும் உதவி விதை அலுவலர்கள் உடனிருந்தனர்.