புதுக்கோட்டை, ஆக.29: எப்டிஓ முறையை தவிர்த்து, தொகுப்பூதிய அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழில்நுட்ப உதவியாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. முகாமில் ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மெர்சி ரம்யா துறை சார்ந்த அலுவலர்களிடம் கொடுத்து விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழில்நுட்ப உதவியாளர்கள் சங்கத்தினர், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யாவை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சி துறையில் தொழில்நுட்ப உதவியாளர்களாக கடந்த ஓராண்டுக்கு மேலாக பணியாற்றி வருவதாகவும், தங்களுக்கு இதுநாள் வரை மாத ஊதியம் ரூ.22.500 என்று வெளி ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த ஊதிய முறையை மாற்றி எப்டிஓ அடிப்படையில் ஒவ்வொரு தவணை வாரியாக ரூ.300, 450 என்று மதிப்பு ஊதிய கொடுக்கப்படுகிறது. இதனால் எங்களுக்கு மாத ஊதியம் 4000 முதல் 5000 வரை மட்டுமே கிடைக்கும். இந்த முறையை மாற்றி எங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் ஊதியம் வழங்கிட வழிவகை செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.