மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் துணை தலைவர் பதவி பெறுவதற்காக வார்டு உறுப்பினர்களுக்கு லஞ்சம் வழங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா, காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது இந்த ஊராட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த மாலா என்பவர் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பேற்றார். அப்போது வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் துணைத்தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. இதில் அதிமுக ஆதரவாளரான 12வது வார்டு உறுப்பினர் வினோத்குமார் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 10 பேர் துணைத்தலைவர் வினோத்குமார் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், துணைத்தலைவர் பதவியை பயன்படுத்தி ஊராட்சி நிதியில் பல்வேறு முறைகேடு நடத்தியதாகவும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
…