கொடைக்கானல் : ஊரடங்கு தளர்வில் கொடைக்கானலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு இ-பாஸ், இ-பதிவு இல்லாமல் சுற்றுலாப்பயணிகள் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கொடைக்கானலுக்கு நேற்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்தனர்.பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் திறக்கப்பட்டுள்ளன. பல மாதங்களுக்கு பின்பு சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவிற்கு நேற்று காலை முதன் முதலில் வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டது. பூங்காவிற்கு வந்த சுற்றுலாப்பயணிகள் அனைவருக்கும் கிருமிநாசினி வழங்கப்பட்டது. உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்ட பின்னரே சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில், கொடைக்கானலில் படகு சவாரி உள்பட அனைத்து சுற்றுலா இடங்களையும் திறக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….