சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வெளியில் சுற்றும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடந்த 10ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்தது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தான் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கடந்த 10ம் தேதி முதல் ஒலிப்பெருக்கி, துண்டு பிரசுரங்கள் மூலம் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். இந்த நிலையில் கொரோனா நோய்த் தொற்றின் தீவிரம் புரியாமல் மக்கள் அடிக்கடி வெளியில் சுற்றுவதாகவும், வழிகாட்டு நெறிமுறைகளை சரிவர பின்பற்றவில்லை என்றும் புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் தேவை இல்லாமல் வெளியில் சுற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.இது குறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், இன்று முதல் ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வெளியில் வாகனங்களில் வரும் மற்றும்a நடமாடும் நபர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசின் அறிவுரைகளை பின்பற்றி, கொரோனா தீவிரமாக பரவி வரும் இக்காலகட்டத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுவதில் இருந்து பொதுமக்கள் தங்களை தவிர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….