ஈரோடு, செப்.19: ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தணிக்கையாளர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
இதில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை போதிய கால அவகாசம் வழங்காமல், உரிய காலிப்பணியிடங்களை நிரப்பாமல் கடும் பணி சுமையை திணிப்பதை கண்டித்தும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பிடிஓ சோமதாஸ் தற்காலிக பணி நீக்கத்தையும், மதுரை மாவட்டம் செல்லம்பட்டி பிடிஓ கீதா பணியிட மாறுதலுக்கான உத்தரவையும் உடனடியாக ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.