காஞ்சிபுரம்,ஜூலை 11: காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் 400க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியமாக ரூ.9,300 வழங்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் தனியார் நிறுவனம் தூய்மை பணிகளை மேற்கொண்டு வந்தநிலையில், தற்போது புதிய தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு, நேற்று பணியை புறக்கணித்து, மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள முக்கிய சாலையான இந்திரா காந்தி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் அதிகாரிகள், தூய்மை பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர். பின்னர், அவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.