ஊட்டி : ஊட்டி லவ்டேல் பகுதியில் ராட்சத மரம் சாலை மற்றும் தண்டவாளத்தின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதலே பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் கடும் குளிர் நிலவியது. பனிமூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்ட படியே பயணித்தனர். மழை காரணமாக, ஊட்டி-மஞ்சூர் சாலையில் லவ்டேல் பகுதியில் ராட்சத கற்பூர மரம் ஒன்று சாலையின் குறுக்காக விழுந்தது. இந்த மரத்தின் கிளையில் சாலையை ஒட்டி செல்லும் மலை ரயில் தண்டவாளத்தின் குறுக்காகவும் விழுந்தது. இதனால், இந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும், ஊட்டி-குன்னூர் நோக்கி சென்ற மலை ரயிலும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்புத்துறையினர், ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ராட்சத மரத்தை மரக்கிளையை வெட்டி அகற்றினர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் ஜேசிபி உதவியுடன் வெட்டப்பட்ட மர துண்டுகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து, 2.45 மணியளவில் போக்குவரத்து சீரடைந்தது. தண்டவாளத்தில் விழுந்த மரமும் அகற்றப்பட்டதால் மலை ரயில் புறப்பட்டு சென்றது….