ஊட்டி, பிப்.2: சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட வகைகள் உள்ளன. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் கோடை சீசனுக்கு ஜனவரி முதலே பூங்காக்கள் தயார் செய்யும் பணிகள் துவங்கி விடும். மலர் நடவு பணிகள், குளங்கள் உள்ளிட்டவைகள் தூர்வாரி சுத்தம் செய்யப்படும். சீசனின் போது பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பார்கள்.
இந்நிலையில் நடப்பு ஆண்டு கோடை சீசனுக்காக பூங்காக்கள் துரித கதியில் தயாராகி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் சீரமைப்பு பணிகள் துவங்கியுள்ளன. தற்போது பனிப்பொழிவு துவங்கியுள்ள நிலையில் அலங்கார மேடைகள் மற்றும் தொட்டிகள் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள புல் மைதானம் சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டு உள்ளது. புற்கள் நன்கு வளரும் வகையில் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகின்றன.