பாடாலூர், செப். 13: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சிறுவயலூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊட்டச்சத்து உணவு திருவிழா நேற்று நடைபெற்றது. இதில், மகளிர் குழுவினர் பங்கேற்று, உளுந்தங்கஞ்சி மற்றும் கேழ்வரகு, நவதானியங்கள், கீரை வகைகள், கிழங்கு வகைகள், இனிப்பு, காரம், காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள் ஆகியவற்றால் பல்வேறு வகையான பாரம்பரிய உணவு வகைகளை தங்கள் வீடுகளில் தயார் செய்து கண்காட்சியில் வைத்தனர்.
இந்த உணவுகளில் உள்ள சத்துக்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் துரித உணவுகளை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, குழந்தைகளின் வளர்ச்சிக்காகவும், சக்திக்காகவும் பாரம்பரிய உணவுகள் உட்கொள்வதை பின்பற்ற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், இந்த திருவிழாவை ஏற்பாடு செய்ததாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் நாகராஜன், விஏஓ பிரசாந்த், கணக்காளர் சுசி, சமுதாய வள பயிற்றுநர்கள் தேன்மொழி, ஜெயலட்சுமி, ரஞ்சிதா, சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.