லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரபல தொழில் அதிபர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 150 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரபல தொழில் அதிபரான பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், தொழிற்சாலை, குளிர்பான கிடங்கு, பெட்ரோல் நிலையங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத 150 கோடி ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து 150 கோடி ரூபாய் பணம் துணை ராணுவ படையினரின் உதவியுடன் பாதுகாக்கப்பட்டது. போலி ரசீது மூலம் குட்கா பொருட்களை விற்பனை செய்து ஜி.எஸ்.டி. செலுத்துவதில் முறைகேடு நடத்தியதும் விசாரணையில் அம்பலமானது. மேலும் மும்பையில் இருந்து வாசனை திரவியங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதிலும் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலி ரசீது மூலம் குட்கா பொருட்களை விநியோகம் செய்ய தயாராக இருந்த 4 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பண புகழத்தை கட்டுப்படுத்திவிட்டதாக பாஜக அரசு கூறி வருகிறது. இந்நிலையில் தொழில் அதிபர் ஒருவரது வீட்டில் ரொக்கமாக 150 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …