உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் குளிக்க சென்ற வாலிபர் 12 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்பு

 

உளுந்தூர்பேட்டை, ஜன. 28: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது செங்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ரயில்வே தரைபாலத்தில் மேற்கூரை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர் திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகன் விஜயகுமார் (26). இவர் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் வேலை முடிந்து இதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சக தொழிலாளியுடன் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது தண்ணீரில் மூழ்கியவர் மீண்டும் வராததால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், 7 மணியளவில் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு அசோக்குமார் தலைமையிலான குழுவினர் இரவு முழுவதும் விஜயகுமாரின் சடலத்தை தேடி பார்த்தனர்.

தண்ணீர் அதிகமாக இருந்ததால் இரவு முழுவதும் தண்ணீரை இறைத்து நேற்று காலை 7 மணியளவில், சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு விஜயகுமாரை சடலமாக மீட்டனர். இது குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரீத்தா மற்றும் போலீசார் வழக்கு பதிந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி