சென்னை: உல்லாசத்துக்கு வர மறுத்ததாலும், செல்போனில் பேச மறுப்பு தெரிவித்ததாலும் கள்ளக்காதலியின் 2 குழந்தைகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு கள்ளக்காதலன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொருக்குப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொருக்குப்பேட்டை பாரதி நகரில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கவிதா. இவரது கணவன் ரசூல். இவர்களுக்கு ஸ்டீபன் (9), ஆல்பர்ட் (7) என்ற மகன்கள். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கவிதாவின் நடத்தையில் ரசூலுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரை கண்டித்துள்ளார். ஆனாலும், அவரது நடவடிக்கையில் மாற்றம் இல்லாததால் மனைவியை விட்டு ரசூல் பிரிந்து சென்றுள்ளார்.இதன் பிறகு கவிதா, எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தூய்மைப்பணியாளராக வேலை செய்துள்ளார். அப்போது, செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கத்தை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் ராஜேஷ் (35) என்பவருடன் கவிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும், கவிதா அடிக்கடி செல்போனில் ராஜேசுடன் பேசி வந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ராஜேசுடன் பேசுவதை கவிதா தவிர்த்து வந்துள்ளார். மேலும் ராஜேஷ் உல்லாசத்திற்கு அழைக்கும்போது அவருடன் செல்ல கவிதா மறுத்துவிட்டதாக தெரிகிறது. இது ராஜேசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘‘ஆரம்பத்தில் தன்னுடன் உல்லாசமாக இருந்தவர், தற்போது ஏன் முரண்டுபிடிக்கிறார்’ என்று நினைத்து கவிதாவை பழிவாங்க நினைத்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு கவிதா வீட்டுக்கு வந்த ராஜேஷ், கவிதாவுடன் அன்பாக பேசியுள்ளார். மேலும், நமக்குள் எந்த மனக்கசப்பும் வேண்டாம். நாம் இருவரும் இணைந்து குடும்பம் நடத்தலாம், என்று கூறியுள்ளார். ஆனால், கவிதா சம்மதம் தெரிவிக்காமல், வீட்டை விட்டு வெளியே போ என அவரை விரட்டியுள்ளார். சரி, சிறிது நேரம் குழந்தைகளுடன் பேசிவிட்டு செல்கிறேன், என ராஜேஷ் கூறியுள்ளார். அப்போது, தான் ஏற்கனவே கொண்டு வந்த விஷம் கலந்த குளிர்பானத்தை கவிதாவின் குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். அதை வாங்கி அவர்கள் குடித்த பின்னர், விஷம் கலந்த குளிர்பானத்தில் பாதியை ராஜேசும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் குழந்தைகளும், ராஜேசும் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் கவிதா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார்.இதனிடையே, தகவலறிந்து வந்த ஆர்.கே.நகர் போலீசார், ராஜேஷ் மற்றும் குழந்தைகளை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைகள் ஸ்டீபன், ஆல்பர்ட் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆர்.கே. நகர் போலீசார் வழக்குபதிவு செய்து, கள்ளக்காதலி கவிதாவுக்கு விஷம் கொடுக்காமல் அவரது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு ராஜேஷ் ஏன் தற்கொலை செய்யவேண்டும். தனியாக கவிதா தவிக்க வேண்டும் என்று நினைத்து பழிவாங்கினாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலியின் குழந்தைகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்துவிட்டு கள்ளக்காதலன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….