திருமலை: திருமலை நாத நீராஞ்சன மேடையில் உலக மக்கள் நலனுக்காக பாலகாண்ட அகண்ட பாராயணம் நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே உள்ள நாதநீராஞ்சன மேடையில் நேற்று காலை உலக மக்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி 10ம் கட்ட பாலகாண்ட அகண்ட பாராயணம் நடைபெற்றது. இதில் 45 முதல் 49வது அத்யாயத்தில் இருக்கும் 133 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டது. வேத பண்டிதர்கள் அகண்ட பாராயணம் செய்ய ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் அவர்களை பின்தொடர்ந்து ஸ்லோகத்தை பாராயணம் செய்தனர். இதில் எஸ்.வி.வேதிக் பல்கலைகழக ஆச்சார்யா பிரவா ராமகிருஷ்ண சோமயாஜி, தர்மகிரி வேத பள்ளி பண்டிதர்கள் கே.ராமானுஜாச்சாரியார், பிவிஎன்என் மாருதி ஆகியோர் ஸ்லோகம் வாசித்தனர். தர்மகிரி வேதப் பள்ளி, எஸ்.வி.வேத பல்கலைக் கழக ஆசிரியர்கள், எஸ்.வி.உயர் வேதப் பல்கலைக் கழக வேத பண்டிதர்கள் பாராயணத்தில் பங்கேற்றனர். எஸ்.வி. இசை மற்றும் நடனக் கல்லூரியின் ஆசிரியை டாக்டர்.கே.வந்தனா, ‘அந்தரோ மஹானுபாவுலு… என்னும் பாடல் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தியாகராஜரின் கீர்த்தனையையும், இறுதியில் ஹனுமான் ஜெய ஹனுமான்’ கீர்த்தனையையும் பாடினார். இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்….