காவேரிப்பட்டணம், பிப்.2: காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்ட அகரம் சாலை அம்பேத்கர் தெருவில், சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் போதிய தெரு விளக்குகள் இல்லை என, அப்பகுதி மக்கள் பேரூராட்சி தலைவரிடம் முறையிட்டனர். இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமாரிடம் கோரிக்கை விடுத்தார். அவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ₹3 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து அப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பதற்கான பூமிபூஜை விழா நேற்று நடந்தது.
இதில் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி துணை தலைவர் மாலினி மாதையன், கீதா ஞானசேகரன், அமுதா பழனி, அமுதா சக்திவேல், வசந்தி சின்ராஜ், முனிராஜ், சிவப்பிரகாசம், காங்கிரஸ் நகர தலைவர் தேவநாராயணன், வட்டார தலைவர் கிருஷ்ணன் மற்றும் தேவேந்திரன், சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்