பந்தலூர், மே. 3: பந்தலூர் அருகே உப்பட்டியில் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உப்பட்டியில், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் ஏழை, கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஏழை குடும்பத்தை சார்ந்த பெண்களுக்கு இலவச தையல் இயந்திரமும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஓராண்டாக பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, பெண்கள் சுயமாக சம்பாதிப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. நெல்லியாளம் நகராட்சி தலைவர் சிவகாமி தலைமை வகித்தார். கூடலூர் அரசு கல்லூரி உதவி பேராசிரியர் மகேஷ்வரன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் ஸ்ரீகலா, சமூக ஆர்வலர் ஜெபமாலை, டிரஸ்ட் செயலாளர் ஜான்சி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தையல் ஆசிரியை சுலோச்சனா நன்றி கூறினார்.