மதுரை, ஜூலை 26: மதுரை, உத்தங்குடியில் உள்ள ஊரணியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், அரசு தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, உத்தங்குடி குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த தவமணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை – மேலூர் சாலையில் உத்தங்குடி அரசு பெண்கள் மாதிரி பள்ளியின் பின்புறம் அமைந்துள்ள ஊரணி புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. ஊரணியை மீட்டெடுக்கவும், சீரமைக்கவும், நீர்வௌியேறும் வழித்தடத்தை உறுதி செய்திடவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர், மனுவிற்கு கலெக்டர், தாசில்தார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு விசாரணையை ஆக.1க்கு தள்ளி வைத்தனர்.